பல்கேரிய பாபா பல்கேரியாவைச் சேர்ந்தவர் இந்த பாபா வங்கா. இவர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூட்டியே கணித்துக் கூறுவார். இவருக்கு பல்கேரிய நாஸ்ட்ரடாமஸ் என்ற செல்லப் பெயரும் உண்டு.
இவரது இயற்பெயர் வெஞ்செலியா பண்டவா டிமிட்ரோவா என்பதாகும். இவர் தனது 12 வயது வரை எல்லோரையும் போலத்தான் வாழ்ந்து வந்தார். ஆனால் அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் பெரும் மாற்றம் வந்தது.
வெஞ்செலியா எதிர்காலத்தைக் கணித்துக் கூற ஆரம்பித்தார். என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் கூற ஆரம்பித்தார். இது பலருக்கு வியப்பளித்தது. பலரின் பிரச்சினைகளையும் அருள் வாக்கு கூறி தீர்த்து வைத்தார் வெஞ்செலியா.
இவருக்கென்று ஆதரவாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. இரண்டாம் உலகப் போரின்போது பல்கேரிய ஜார் மன்னர் 3ம் போரிஸ் இவரைப் பார்த்து அருள் வாக்கு கேட்டதாக சொல்கிறார்கள்.
உங்களுக்கு எப்படி எதிர்காலத்தைக் கணித்துக் கூற முடிகிறது என்று இவரிடம் கேட்டால், உருவம் இல்லாத சில மனிதர்கள் தனக்குத் தகவல் தருவதாகவும் அதை வைத்தே தான் கணித்துக் கூறுவதாகவும் கூறியுள்ளார் இவர்.
இவர் 2004ம் ஆண்டு உலகை உலுக்கிய சுனாமியை முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம். மேலும் உலக வெப்பமயமாதல் குறித்தும் இவர் கூறியுள்ளாராம்.
அதேபோல நியூயார்க்கில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலையும் இவர் முன்கூட்டியே கணித்துக் கூறியுள்ளாராம். இரும்புப் பறவைகள் வந்து அமெரிக்காவில் தாக்குதல் நடத்தும். அப்பாவி ரத்தங்கள் மண்ணில் சிந்தும் என்று அவர் கூறியுள்ளாராம்.
2010 – 2016 ஆண்டுகளுக்கு இடையே அணு யுத்தம் வெடிக்கும் என்றும் ஐரோப்பாவே காலியாகி விடும் என்றும் இவர் கணித்துக் கூறியுள்ளார். இது நிறைவேறுமா என்பதை அறிய இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
2130ம் ஆண்டு வாக்கில் மனிதர்கள் தண்ணீருக்கு அடியில் வசிக்க ஆரம்பிப்பார்கள் என்றும் இவர் கணித்துள்ளார். இதற்கு வேற்றுகிரகவாசிகள் உதவி செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
3005ம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்தில் பெரிய போர் வெடிக்கும் என்றும் இவர் கணித்துள்ளார். இதுதான் பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது
இவர் கடந்த 1996ம் ஆண்டே மறைந்து விட்டார். ஆனால் ஐஎஸ்ஐஎஸ் பிறக்கும் என்று இவர் கூறியதுதான் இப்போது மீண்டும் இவரது பெயர் பரபரப்பாக அடிபட முக்கியக் காரணமாக உள்ளது.
இஸ்லாமியக் குடியரசு உருவாகும் இதுகுறித்து அவர் கூறுகையில், உலக இஸ்லாமியர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஐரோப்பாவில் முஸ்லீம் போர்க்குழு ஊடுறுவும். ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 2043ம் ஆண்டு வாக்கில் புதிய குடியரசை அவர்கள் நிர்மானிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார். ஐஎஸ்ஐஎஸ் பிறப்பைத்தான் இவ்வாறு பாபா வங்கா கூறியுள்ளார் என்று சொல்கிறார்கள்
No comments:
Post a Comment